Sunday, December 15, 2013

காலம் கடந்த பின்னும்...

காலம் காலம் கடந்த பின்னும்
கண்கள் உன்னை தேடடுதே...

உன்
அழகு விழிகாண உள்ளம்
நித்தம் ஏங்குதே...

கடிகாரம் உரைக்கிறது
நீ
வந்து போன சுவடுகள்...

என்
பிஞ்சு மனம் வலிக்கிறது
உன்
அன்பு மனம் காணாமல்...

காலம் தவற விட்டதால்
என்னை நானே வெறுக்கிறேன்...

உன்னை
காணாத நாளினை
நினைவிலிருந்து அழிக்கிறேன்...

Monday, November 11, 2013

கனவுகளுடன்...

ஆண்டுகளாய் அலங்கரித்த
பரிசுகளும்
அவசரமாய் சேகரித்த
அழகிய பூக்களும்
என்றும்
வாடாமல் அற்புத
நினைவுகளை தூவுகிறது...

என்னவளை சேர்ந்திடும்
கனவுகளுடன்
என் அறையில்...

Tuesday, August 20, 2013

அம்பு...

அன்பே
இனியும் தொடுக்காதே
அ(ம் )ன்பினை உனது
விழிகளால்...

அது துளைப்பதற்கு
இல்லை இதயம்
இருப்பது உயிர் மட்டுமே...

Thursday, June 20, 2013

கனவு...

நினைவுகளை முழுமையாய்
நிறைவேற்றிடும் உலகம்
கவலைகளை கடுகளவும் 
கொண்டிராத துருவம்...

இன்பமோ என்றென்றும் 
இன்றியமையாத பருவம்
துன்பமோ தென்படாமல் 
தொலைந்திட்ட உருவம்...

இனி 
இனித்திடும் வெற்றிகள் 
இமைகளை நிறைத்திடும் 
வருத்திடும் தோல்விகள் 
இல்லாமல் நகர்ந்திடும்...

இது 
மானிடம் உணராத 
உன்னத உறவு...
நாம் 
தினந்தோறும் கண்டிடும் 
மனம்கவரும் கனவு....

Wednesday, May 22, 2013

ஒற்றை ரோஜா...

வரம் கிடைத்தும்
என்னவளின் 
அழகு முகத்திடம் 
தோற்று விடுகிறது...

அவள் 
கூந்தலில் ஆணவமாய் 
அமர்ந்திருக்கும் 
ஒற்றை ரோஜா...

Thursday, May 9, 2013

தடையாகும் நாணம்...

பெண்ணே
அருகில் இருந்தும்
அறிமுகத்திற்காக ஏங்குகிறேன்...

என்
நாணங்களை தவிர்த்து
உன்னிடம்
நயமுடன் உரையாடும்
நாளினை எண்ணி...

Thursday, May 2, 2013

விடியும் வரை...

எனை ஆளும் ஒருவனை
மனம் கவரும் மன்னனை
தினந்தோறும் எண்ணியே
தவித்திருந்த அந்நாளும்...

வரன் பார்க்கும் பொழுதுனில்
முகம் சிவக்கும் வேளையில்
ஓர விழி பார்வையில்
ரசித்திடும் இந்நாளும்...

உறவினர்கள் கூடியே
மகிழ்ச்சியுடன் பேசியே
உணர்வுகளை சேர்க்கையில்
நிச்சயங்கள் செய்கையில்

கை விரல்கள் ஆடிடும்
இரு இதழ்கள் பேசிடும்
விடியும் வரை...

Monday, April 15, 2013

ஒரு பார்வை சிறு பார்வை...

பெண்ணே
உன்னை கடந்திடும் பொழுது
ஏவிடும் கள்ளப் பார்வையை
ஒருமுறை
என் எதிர்வரும் பொழுது
பொழிந்திட கூடாதா..?

முழு மதியால் ஒளிர்ந்திடும்
இரவினை போல்
என் மனதும்
முழுமையாய் நிறைந்திடுமே
உன் விழியால்...!

Monday, April 8, 2013

இருமடங்கு...

எந்நாளும் எனக்கு
பிடித்தவையே தந்துவிட்டு
மனம் கவர்ந்தவனை மட்டும்
மறுப்பது நியாயமா?

ஒருமுறை என்னவனிடம்
பேசிப் பாருங்கள்...
அவனை மட்டுமல்ல
அவனை காதலிப்பதற்கு
என்னையும் பிடிக்கும்
இருமடங்கு...

Wednesday, April 3, 2013

பூகம்பம்....

பெண்ணே
உன் முதல் பார்வையே
மனதை நொறுக்கி விட்டது..
பிறகெப்படி
பூகம்பம் வராமலிருக்கும்
ஒவ்வொரு நாளும்
நீ
தரை பார்த்து
நடக்கும் போது...

Thursday, March 21, 2013

ஏக்கம்...

ஒவ்வொரு நாளும்
என் இன்ப துன்பங்களை
பகிர்ந்திடும் இனிய நண்பனாக
இருக்க ஏக்கம் கொள்கிறேன் ...

ஆனால்
வழங்க இயலாத
வரத்தினை கேட்பது போல்
தந்தையாகவே அறிமுகபடுத்துகிறான்
இறைவன்
ஒவ்வொரு முறையும்...

Tuesday, March 19, 2013

ஒற்றையாக...

நடந்திடும்
வழிகள் அனைத்திலும்
இருவரின் கால் தடங்கள்...

ரசித்திடும்
இடங்களை நிறைத்திடும்
இருவரின் இனிய உறுவங்கள்...

இமைத்திடும்
விழிகள் முழுதிலும்
என்னவளின் அழகு முகங்கள்...

துடித்திடும்
இதயத்தை இறுக்கிடும்
சுகமான காதல் நினைவுகள்...

உண்மையில் மனமோ
நெடுந்தூரம் நீண்டிடும்
ஒற்றையடி பாதையில்
ஒற்றையாக கனவுகளுடன்...

Sunday, March 10, 2013

எப்போ புள்ள...

உன்ன
புரிஞ்சிட முடியல..
முழுசா
பிரிஞ்சிட மனமில்ல...

நா
பகிர்ந்திட தவிக்கிற...
நீ
தெரிந்தேதா ஒதுக்குற...

சிறு
காரணமு தெரியல...
பல
குழப்பங்கள் உள்ளத்தில...

உன்ன
நினைச்சாலே நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பறக்குதுள்ள...

நீ
பார்க்கும்போது தேகத்தில்ல
மின்சாரம் பாயுதுள்ள...

நீ
பேசும்போது காதினிலே
தேவதைகள் பாடுதுல்ல...

உன்
ஒத்த வார்த்த போதும்புள்ள
நித்தமும்
வசந்தம் வாழ்க்கையுல..

நீ
முடிவெடுக்க தயங்கயுல
உள்ளம்
வலியால வாடுதுல...

Monday, March 4, 2013

ஒருமுறையேனும்...

ஸகியே   ஒருமுறையேனும்
என் காதலை 
உன் மனதினில் 
உணர்ந்து பார்...

காதல் மலராதென 
மரத்திருக்கும் உன் மனதிலும் 
தீராத வசந்தங்களை தூவிடும் 
அற்புதங்களில் நெகிழ்ந்திடுவாய்...

Monday, February 18, 2013

சுகமாகும் சொகுசுந்து பயணம்...

நெடுதூர பயணமும்
நொடிப் பொழுதாய்
நகர்ந்திடும் அலுப்பில்லாமல்...

அணிந்திருக்கும் ஆடையை
காட்டி குதூகலம்
அடைவதும்...

ஓடிடும் மரங்களை
பார்த்து தலையாட்டி
ரசிப்பதும்...

சாலையோர பூக்களை
கேட்டு வேண்டுமென்று
அழுவதும்...

நிறைந்திருக்கும் தின்பண்டங்களை
சிதறடித்து தின்பதும்...

விளையாட்டு  களைப்பில்
ஆனந்தமாய் உறங்குவதுமாக
குட்டி தேவதைகளின்
குறும்பான செயல்களால்
சுகமாகும் சொகுசுந்து
பயணம்....

Tuesday, February 12, 2013

அலையாய்...

நீ 
சிறையிட்டு மறைத்திருக்கும் 
இதயத்தை 
நான் 
விடுவித்து மகிழ்விக்க 
விரும்புகிறேன்...

நீ 
மனமுவந்து வெளியேற 
மறுப்பதனால் 
கடல் அலையாய் கரைதொட்டு 
திரும்புகிறேன்....

Thursday, February 7, 2013

பொங்கலோ பொங்கல்...

வயல் வெளியிலே 
நெல்லை பார்க்கையுலே 
கண்ணு குளிருதையா...

ஒன்றா கூடிக்கொண்டு 
கதிர் அறுக்கையில் 
மனம் நிறையுதையா...

வேக வெச்சபின்னே 
உரல் குத்தையுலே 
அண்ணம் பிறக்குதையா...

எல்லா உயிர்களும் 
உண்டு மகிழ்கையில் 
திருப்தி கிடைக்குதையா...

ஜல்லிக்கட்டு காளை 
துள்ளி அடக்கையில் 
வீரம் பெருகுதையா...

கும்மி அடிச்சு 
பூ பறிக்கையில் 
ஆனந்தம் கூடுதையா...

காமதேனு தன்னை 
வேண்டி கும்பிடவே 
தொழில் வளருதையா...

பொங்கல் பொங்கும் வேளை 
குலவை சத்தம் 
நெகில வைக்குதையா...

இது 
இன்னல்கள் நீக்கிடும் 
இன்பங்கள் பெருக்கிடும் 
காணும் பொங்கலையா...
இனித்திடும் 
பொங்கலோ பொங்கலையா... 

Wednesday, February 6, 2013

இதமாகும் ஒலிக்கடிகை...

சுகமான உறக்கத்தை 
சத்தமிட்டு நொறுக்கிடும் 
கடிகார ஒலிகூட 
இனிமை தான்...

நள்ளிரவில் நண்பனுக்கு 
பிறந்தநாள் வாழ்த்துக்களை 
பகிர்ந்திடும் பொழுது...

Sunday, February 3, 2013

விரைந்தோடும் வார்த்தைகள்...

அன்னையின் அரவணைப்பில் 
வரமறுத்த எழுத்துக்கள் 
கவிதைகளாய் பாய்கிறதின்று...
அவளை கண்டவுடன்...

Monday, January 21, 2013

அன்பினால் தவிக்கும் அன்பு..!!!

பிறந்த நொடி முதல் 
பிடித்ததையே செய்தவர்கள் 
உன் 
மனம் கவர்ந்தவனை 
மறுத்தா விடுவார்கள்???

தவிர்க்கப்படுமென்ற 
தயக்கத்தில் நீ புரிந்திடாதது 
என் 
காதலை மட்டுமல்ல...
உன் 
அன்பு தெய்வங்களின் 
மனதையும் தான்...

Friday, January 18, 2013

தண்டனை...


அனுமதியின்றி நினைவில் 
நுழைந்தவளுக்கு 
ஆயுள் தண்டனை...
இதயத்தில்...

Thursday, January 17, 2013

தவித்திட நினைத்து...!!!

தவிர்த்திட நினைத்து 
தோற்று விடுகிறேன்...
ஒவ்வொரு முறையும் 
அவள் 
அழகு விழிகளிடம்...

Friday, January 11, 2013

கனவாகும் காலச்சுவடுகள்....

இன்றெதுவும் 
கனவாகி போகின்ற 
காலம் தான்...

பள்ளி பேருந்தின் 
ஜன்னல் ஓரத்தில் 
தலை சாய்த்தபடி நான் 
எண்ணிய மரங்கள் - இந்த 
கலியுகத்தின் காசுகளாய் 
உருமாறி வருவதும்....

கோடை வெயிலின்
கொடிய சூட்டினை 
குதூகலமாய் தனித்த கேணிகள் 
புவி வெப்பமாதலால் 
கானல் நீராகுவதும்.....

மாதம் மும்மாரி 
என்ற நிலை மாறி 
ஆண்டில் ஒரு பருவமாவது 
மழை காலம் என்பதும் 
நாளைய சமுதாயத்தின் 
கனவுகளே....

Tuesday, January 8, 2013

வழிசொல்லடி...


தனிமை 
என்னை வதைக்குதடி...

ஒவ்வொரு நொடியும் 
உன் 
நினைவுகளை விதைத்து 
என் 
இதயத்தை இறுகச் செய்கிறது...

முன்பு போல் இல்லை 
என் உலகம்...

காண்பவைகள் எல்லாம் 
உன் 
அழகு முகமாவதும் 
கேட்பவைகள் எல்லாம் 
உன் 
இனிய குரலாவதும் 
வாடிக்கையாகி விட்டது...

உன் 
நினைவுகளோடு நடக்கின்றேன் 
என்னோடு இருப்பதாக உணர்கின்றேன்...

இந்த 
வேதனை எதற்கு போதுமடி..
இதில் 
மீண்டு இன்புற வழிசொல்லடி...

Thursday, January 3, 2013

வேண்டா விருப்பம்...


பிடித்திடும் என்பதால் 
பிரிந்திட துணிகிறாய்...
உன் 
தவிப்புகள் புரிந்ததால் 
தனிமையில் துடிக்கிறேன்...